ஷங்கர், ரஜினி, கமல் படங்களுக்கு இணையான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் தனுஷ் நடித்துள்ள ‘அனேகன்’. கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இந்தப்படத்தை கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ், எழுத்தாளர்கள் சுபா, எடிட்டர் ஆண்டனி என தனது வழக்கமான வலுவான கூட்டணியுடன் களம் இறங்கியுள்ளார் கே.வி.ஆனந்த்.
தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட்டை சேர்ந்த அமிரா தஸ்தூர் நடிக்க, ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் நவரச நாயகன் கார்த்திக். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று மாலை தயாரிப்பாளருக்கு சொந்தமான வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய இயக்குனர் கே.வி.ஆனந்த், கார்த்திக்கைப்பற்றி பேசும்போது, “இந்தப்படத்தின் கதையை சொல்வதற்காக கார்த்திக்கை சந்தித்தபோதே, எடுத்த எடுப்பிலேயே சார் நீங்கள் இந்தப்படத்தில் நடிக்க மாட்டீர்கள் என்றேன்.. ஆனால் அவரோ என் நினைப்பை பொய்யாக்கும் விதமாக சம்மதித்துவிட்டார். இவர் சம்மதிக்க மாட்டார் என என் உதவியாளரிடம் ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டி தோற்றுவிட்டேன்.
க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்கும்போது நான் மூன்று பக்கத்திற்கு வசனம் எழுதி எடுத்து வந்திருந்தேன். ஆனால் கார்த்திக்கோ அவரது பாக்கெட்டில் இருந்து பத்து பக்க வசன பேப்பரை எடுத்து காட்டுகிறார். அதை படித்துப்பார்த்தால், அது க்ளைமாக்ஸிற்கு இன்னொரு பரிமாணத்தை தருவதாக இருந்தது. அதாவது அவர் அந்த அளவுக்கு படத்தில் ஒன்றிப்போய்விட்டார். அதிலிருந்தும் சில வசனங்களை க்ளைமாக்ஸில் பயன்படுத்தியிருக்கிறேன்” என்று கூறினார்.