மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நகத்தை கடித்துக்கொண்டு காத்திருக்கிறார் சின்ன ஆர்யா.. அதாங்க நம்ம ஆர்யாவின் தம்பி சத்யா தான். அவர் முதன்முதலாக நடித்த ‘புத்தகம்’ படம் அவருக்கு தமிழ்சினிமாவில் சரியான எண்ட்ரியை கொடுக்காத நிலையில் அவர் தற்போது முழு மூச்சாக நம்பியிருப்பது ‘அமரகாவியம் திரைப்படத்தை தான்.
இந்தப்படத்தின் இயக்குனர் ஜீவாசங்கர் ஆர்யாவின் நெருங்கிய நண்பர் தான். அந்தவகையில் ஆர்யாவை சந்திக்கும்போதெல்லாம் அவருக்கும் அவரை சேர்ந்தவர்களுக்கும் இந்தபடத்தின் கதையை சொல்லும்போதெல்லாம் சத்யாவும் கேட்டுக்கொண்டுதான் இருப்பார்.
இன்னும் சொல்லாப்போனால் இந்தப்படத்தில் இந்த ஹீரோ நடித்தால் நன்றாக இருக்கும் என்று சற்று பொறாமையுடன் கூடிய ஐடியாவும் கொடுத்திருக்கிறார். காரணம் இந்த மாதிரி ஒரு கதையில் நடிக்க தனக்கு கொடுத்து வைக்கவில்லையே என்கிற எண்ணம் தான்.
ஆனால் ஒருநாள் ஆர்யா தனது தம்பியை அழைத்து, “இந்தப்படத்தை நான் தான் தயாரிக்கப்போகிறேன்.. நீ நடிக்கிறாயா” என்று சத்யாவிடம் கேட்க, அப்போது அவருக்கு தலைகால் புரியவில்லையாம். அந்த அளவுக்கு கதையின் மீதும் இயக்குனர் மீதும் நம்பிக்கை வைத்துள்ளார் சத்யா.
இந்தப்படத்தில் சத்யாவின் ஜோடியாக கேரள நடிகை மியா ஜார்ஜ் நடித்துள்ளார். இந்தபடத்தை வெற்றிப்படமாக்க பல திட்டங்களை வைத்திருக்கும் ஆர்யா வரும் ஜூன்-28ஆம் தேதி இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவையும் வித்தியாசமாக நடத்த திட்டமிட்டுள்ளாராம்.