அந்தப்பட்டியலில்தான் கொஞ்ச நாட்கள் முன்பு வரை அமலாபாலும் இருந்தார். நீலத்தாமரை என்ற படத்தில் அறிமுகமான அமலாபால் அதன்பின் வருடத்திற்கு ஒரு படம் என்ற அளவில் மட்டுமே மலையாளத்தில் தலைகாட்டினார்.. தமிழ், தெலுங்கு என வரிசையாக நடித்துக்கொண்டிருந்தவர் கடந்த வருடம் ‘ரன் பேபி ரன்’ என்ற ஒரே ஒரு மலையாள படத்தில் மட்டுமே நடித்தார். அதுகூட சூப்பர்ஸ்டார் மோகன்லாலுக்கு ஜோடி என்பதால்தான்.
ஆனால் இந்த வருடம் அப்படியே தாய்மொழிப்பாசம் அமலாபாலை கெட்டியாக பிடித்துக்கொண்டுவிட்டது போலும். இல்லையென்றால் வரிசையாக மலையாளப்படங்களில் ஒப்புக்கொள்வாரா என்ன? சில நாட்களுக்கு முன்புதான் ‘ஒரு இந்தியன் பிரணய கதா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தாமானார் அமலாபால். சத்யன் அந்திக்கடு இயக்கும் இந்தப்படத்தில் முன்னணி இளம் நடிகர் ஃபஹத் ஃபாஸிலுக்கு ஜோடியாக நடிக்கிறார் அமலாபால்.
அந்த செய்தியின் சூடு ஆறுவதற்குள் தற்போது இன்னொரு மலையாளப்படத்திலும் அமலாபால் நடிக்க இருக்கிறார் என ஒரு தகவல் வெளியாகிறது. மலையாள சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான சிபி மலயில் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் அமலா. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ‘நேரம்’ பட கதாநாயகன் நிவின் பாலி. இந்தப்படம் ஒரு தாத்தாவிற்கும் பேரனுக்குமான பாசத்தைப் பற்றியதாம்.
நல்ல கதைகள் அமையும் பட்சத்தில் தொடர்ந்து தனது தாய்மொழியிலும் கவனம் செலுத்தப் போவதாகவும் அமலாபால் முடிவு செய்திருக்கிறாராம். இது உண்மையாக இருந்தால், வரவேற்கத்தக்க விஷயம் தான். ஆனால் தமிழில் இப்போது நிமிர்ந்து நில் படத்தில் நடித்துவரும் அமலாபாலின் கைவசம் தனுஷூடன் ஜோடியாக நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ படம் மட்டுமே இருக்கிறது. தெலுங்கிலும் படம் ஏதும் இல்லை. இந்த இடைவெளியை நிரப்புவதற்காக மலையாளப்படங்களில் நடிப்பதைத்தான் தாய்மொழியின் மீதான பாசமாக அமலாபால் காட்டிக்கொள்கிறார் என்கிறார்கள் சிலர்.