அகரம் பௌண்டேசனுக்காக தனது வீட்டையே அளித்தார் சிவகுமார்..!

கடந்த 36 ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கு அவர்களது கல்வியை தொடரும் வகையில் தொடர்ந்து நற்பணிகள் செய்து வருகிறார் கலையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார். மேலும் அகரம் பவுண்டேசன் என்கிற அமைப்பின் மூலமாக சூர்யா, கார்த்தி இருவரும் இணைந்து கல்வி நற்பணிகளை தொடர்கின்றனர்.. இந்நிலையில் கோவிலாக நினைத்து வாழ்ந்துவந்த தனது வீட்டை இந்த சமூகம் பயன்பெற அகரம் பௌண்டேஷனுக்கு அளித்துள்ளார் நடிகர் சிவகுமார் !!

சிவகுமார் பல ஆண்டுகளாக தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்த சென்னை திநகர் பகுதியில் உள்ள இல்லத்தில் இருந்து, தற்போது புதிதாக கட்டியுள்ள லக்ஷ்மி இல்லத்திற்கு சென்றுள்ளார். சிவகுமார் சென்னைக்கு வந்து முதன்முதலில் வாங்கிய சொத்து இந்த வீடு தான். இந்த வீட்டில் தான் சூர்யா, கார்த்தி மற்றும் அவர்களின் தங்கை பிருந்தா ஆகியோர் பிறந்தனர்.

இந்த வீட்டில் தான் அவர்கள் மூவரின் திருமணமும் நடைபெற்றது. பேரன், பேத்திகள் பிறந்தது இங்கே தான். இந்த வீடு சிவகுமார் அவர்களுக்கு செண்டிமெண்டாக மனதிருக்கு நெருக்கமான ஒரு வீடு. இந்த வீட்டை விட மனமில்லாவிட்டாலும் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு மகன்கள் கேட்டுகொண்டதால் இந்த வீட்டில் இருந்து சிவகுமார் அவர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் லக்ஷ்மி இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

அனைவரும் கல்வி பயிலவேண்டும் என்பது சிவகுமார் அவர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் கனவு. தற்போது அந்த வீட்டை அதற்காக துவங்கப்பட்ட ‘அகரம் பௌண்டேஷன்’ செயல்பாட்டிற்கு பயன்படுத்தி வருகிறார்கள். சிவகுமார் அவர்கள் கோவிலாக நினைத்து வந்த வீட்டை தொண்டு நிறுவனமான அகரம் பௌண்டேஷன் செயல்பாடிற்கு தந்துள்ளது உண்மையிலேயே செயற்கரிய செயல் தவிர, வேறென்ன..?

Agaram FoundationKarthiSivakumarSuriyaஅகரம்சிவக்குமார்