போலீஸ் என்பவன் ‘நேர்மையான’ பொறுக்கியாக இருக்கவேண்டும் என ஹரியும் விக்ரமும் இணைந்து அதிரடி மாஸ் காட்டிய படம் தான் ‘சாமி’. படம் ரிலீசாகி பதினான்கு வருடம் ஆனாலும், இன்றைக்கும் கே டிவியில் மாதத்திற்கு இரண்டு தடவை தவறாமல் இந்தப்படத்தை ஒளிபரப்புகிறார்கள் என்பதால் இந்தப்படத்தை விக்ரமுக்கு ஒரு ‘குட்டி பாட்ஷா’ என்றே சொல்லலாம்..
அப்படிப்பட்ட படத்திற்கு இரண்டாம் பாகத்தை உருவாக்கப்போகிறேன் என்று இயக்குனர் ஹரி அறிவித்த நாளில் இருந்தே அனைவரையும் எதிர்நோக்க வைத்த கேள்வி ‘சாமி-2’வில் மாமியாக, அதாங்க விக்ரமின் ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பதுதான்..
பலர் வெவ்வேறு நடிகைகளின் பெயர்களை சொன்னாலும் வெகு சிலரே த்ரிஷாவே ஒருவேளை இதிலும் நடிக்க கூடும் என கொஞ்சமே கொஞ்சம் நம்பினார்கள்.. படம் வெளியாகி சுமார் பதினான்கு ஆண்டுகள் ஆன பின்னரும் அதே ஜோடி தொடருமா என்பதுதான் அவர்கள் சந்தேகத்திற்கு காரணம்..
ஆனால் ஹரியின் சிங்கம் படத்தின் மூன்று பாகங்களையும் ரசித்து பார்த்தவர்களுக்கு மிகவும் பிடித்துப்போன ஒரு விஷயம் மூன்று படத்தின் முக்கியமான ஆட்களை அவர் மாற்றவே இல்லை… அதுதான் படத்துடன் ரசிகர்களை அதிகம் ஒன்ற வைத்தது.
இவ்வளவு பீடிகை எதற்கு என்றால்.. எஸ்.. அதேபோலத்தான் ‘சாமி-2’விலும் விக்ரம் ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா தான் நடிக்கிறார் என்பது இப்போது உறுதியாகி விட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் த்ரிஷா கையெழுத்து போட்டுவிட்டார். வேண்டுமானால் இனி இந்தப்படத்தில் இன்னொரு நாயகி இருப்பாரா, அவர் யாராக இருப்பார் என்கிற யூகங்களை ரசிகர்கள் அலச ஆரம்பிக்கலாம்.