நடிகர் சங்க தேர்தலில் வென்று வாகைசூடிய ‘பாண்டவர் அணி’ தனது முதல் செயற்குழு கூட்டத்தை நடத்தியுள்ளது.. இதில் முக்கியமான சில நிகழ்வுகள் நடைபெற்றன. நடிகர்சங்க புதிய நிர்வாகிகளிடம் சங்கத்தின் வளர்ச்சி நிதியாக பத்து லட்ச ரூபாயை அளித்த நடிகர் சூர்யா, மற்றவர்களும் இதேபோல உதவட்டும் என புது வாசலை திறந்துவிட்டுள்ளார்.
அடுத்ததாக கமல் நடிகர்சங்க அறக்கட்டளையின் அறங்காவலர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள சம்மதித்துவிட்டதாக தெரிவித்தார் விஷால்.. மிக மிக முக்கியமாக, தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட ‘பாண்டவர் அணி’ இனி இருக்காது என்றும் நடிகர் சங்கம் என்றே இனி அழைக்கப்படுவோம் என்றும் விஷால் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்ல நடிகர்சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக ‘ஸ்டார் நைட்’ என்கிற பெயரில் நட்சத்திரங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை என கூறிய விஷால், அதற்குப்பதிலாக இளம் நடிகர்களை வைத்து படங்களை தயாரிப்பதான் மூலமும், நட்சத்திர கிரிக்கெட் நடத்துவதன் மூலம் தேவையான நிதியை திரட்டிக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.