ஒருசில நடிகர்களுக்கு மட்டும் ஏதாவது ஒரு படம் அவர்களது திரையுலக வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்துவிடும்.. ஹீரோக்களுக்கு மட்டுமல்ல, குணச்சித்திர நடிகர்களுக்கும் இது பொருந்தும்.. ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கனகாவின் அப்பாவாக, காந்திமதியின் தம்பியாக, ‘அக்கா.. என்னை எப்படியெல்லாம் போலீஸ் அடிச்சாங்க தெரியுமா” என நெகிழ வைக்கும் குரலில் பேசி நடித்த குணச்சித்திர நடிகர் சண்முக சுந்தரமும் கூட அப்படி ரசிகர்கள் நெஞ்சில் இடம்பிடித்தவர் தான்.. ஆனால் இன்று அவர் நம்முடன் இல்லை.
ஆம். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சண்முக சுந்தரம் இன்று காலமானார். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இருந்து நடித்துவரும் சண்முக சுந்தரம், கிராமத்து மிராசுதார் கேரக்டர்களில் அசத்தலாக பொருந்தினார். அதுமட்டுமல்ல, தமிழ்ப்படம், சென்னை-28 என இன்றைய தலைமுறை ரசிகர்களும் தன்னை நினைவில் வைத்திருக்கும் விதமாக நகைச்சுவை நடிப்பிலும் முத்திரை பதித்தார். நடிகர் சண்முக சுந்தரம் மறைவுக்கு நடிகர் சங்கம் தனது இரங்கலை தெரிவித்துள்ளது.