சமீபத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னலம் பார்க்காமல் களத்தில் இறங்கி வேலை செய்தவர்களில் மிக முக்கியமானவர் காமெடி நடிகர் மயில்சாமி.. தான் வசிக்கும் சாலிகிராமம் பகுதியில் மழை தண்ணீர் தேங்கிய முதல் நாளிலேயே தனது பணியை ஆரம்பித்து விட்டவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து நீர் மிதவை ஒன்றை தயார்செய்து அதில் தெருத்தெருவாக சென்று மக்களுக்கு சாப்பாடு, தண்ணீர் வழங்க ஆரம்பித்தார்..
கடந்த ஏழு நாட்களாக இடைவிடாமல் செய்துவந்த நிவாரண பணியை ஏழாவது நாள் தான் நிறுத்தினார் மயில்சாமி.. காரணம் அவரது உடல்நிலை குறித்து அவரது டாக்டர் செய்த எச்சரிக்கை தான். “நான் பைபாஸ் சர்ஜரி செய்தவன். நிறைய மாத்திரைகள் சாப்பிடுகிறவன். இந்த ஒரு வாரமாக எல்லோமே மாறிப்போய் விட்டது. இரவில் சாப்பிடவேண்டிய மாத்திரையை காலையில் சாப்பிடுகிறேன் காலையில் சாப்பிடவேண்டியதை மாலையில் சாப்பிடுகிறேன். இரண்டுகால்களிலும் புண் வந்துவிட்டது. இனிமேல் தணிணீரில் நிற்கக்கூடாது என்று டாக்டர் சொல்லிவிட்டார். அதனால் எனது பணியை நிறுத்தவேண்டியதாக போய்விட்டது” என்கிறார் உண்மையான வருத்ததுடன்.