கிட்டத்தட்ட இரண்டு வருட கடின உழைப்பை விழுங்கி அட்டகாசமாக உருவாகியுள்ளது கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்துள்ள காஷ்மோரா.. கோகுல் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை பிரசாத் லேபில் எளிமையாக நடத்தினார்கள் படக்குழுவினர். இந்த விழாவில் பேசிய கார்த்தி படத்தை பற்றிய விபரங்களை பகிர்ந்துகொண்டதோடு பழமை வாய்ந்த சீனியர் கலை வித்தகர்களை பற்றிய தனது ஏக்கத்தையும் பகிர்ந்துகொண்டார்.
“இவ்வளவு பெரிய படத்தை முழுக்க நம்ம ஊரில் உள்ளவர்கள் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது எனக்கு ரொம்ப பெருமையாக உள்ளது. அப்பாவின் படங்களில் முருகரின் வீடு என்று காட்டுவார்கள். அதில் அவ்வளவு கலை நயம் இருக்கும். அந்த மாதிரி பணியாற்றியவர்கள் எல்லாம் இன்று இல்லை. அந்த காலத்தில் பண்ணியது போன்று லெதர் ஷூ பண்ண இப்போது ஆட்கள் இல்லை. இன்று 84 வயது நிரம்பிய ஒருவர் பண்ணித் தரும் லெதர் ஷூவை அணிந்து கொண்டு ஓட முடிகிறது, சண்டையிட முடிகிறது. மற்றவர்கள் பண்ணித் தருவது காலைப் பிடிக்கிறது.
இப்படத்தில் அரண்மனை, உடைகள், நாற்காலிகள் என செய்தவர்கள் அனைவருமே வயதானவர்கள். எப்போது ஒருபுறம் நாட்டுபுறக் கலைகள் அழிகிறது என்கிறோமோ, அதே போல சினிமாவில் ஒரு புறத்தில் உள்ள கலைகள் அழிந்து கொண்டே இருக்கிறது. இந்தப் படம் மூலமாக அவர்களை மறுபடியும் கூட்டிக் கொண்டு வந்ததில் ரொம்ப சந்தோஷம்.” என கலை இயக்குனர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் பேசினார் கார்த்தி.