ஆக்சன் கிங் அர்ஜுன் படங்கள் என்றாலே ஆறு பைட் நிச்சயம் என ஒரு காலத்தில் எழுதப்படாத விதியாக இருந்தது. அவரது படத்திற்கு வரும் ரசிகர்களும் சண்டைக்காட்சிகளுக்காகவே தியேட்டருக்கு வருவார்கள். ஆனால் இப்போது ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கிவரும் ‘ஒரு மெல்லிய கோடு’ படத்தில் சண்டைக்காட்சிகளில் இவர் நடிக்கவில்லையாம். ஆனால் அதற்கான வலுவான காரணமும் இதில் இருக்கிறதாம்.
இதுபற்றி அர்ஜுன் சொல்லும்போது, “நான் முதன் முதலாக காக்கிச்சட்டை போட்டது 1986ல் ‘சங்கர் குரு’ படத்திற்காகத்தான். அதற்கு பிறகு நிறைய படங்களில் காக்கிசட்டை போட்டு நடித்துள்ளேன். ஆனால் ‘ஒரு மெல்லிய கோடு’ படத்திற்காக காக்கிசட்டை போடாத ஒரு காவலனாக நடித்திருக்கிறேன். போலீஸ் ஆபீசர் என்றாலே நிச்சயமாக அடிதடி இருக்கும், ஆக்ஷன் இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. இந்த படத்தில் படத்தின் திரைக்கதையே ஆக்ஷன் படம் மாதிரி ஒரு வேகத்தை கொடுக்கும். அதனால்தான் சண்டைக் காட்சிகளில் நடிக்கவில்லை” என கூறியுள்ளார்.
இந்த படத்தில் ஷாம் இன்னொரு கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மனீஷா கொய்ராலா நடித்திருக்கிறார். இன்னொரு ஸ்பெஷலான விஷயம் 30 வருடத்திற்கு முன் அர்ஜுனின் ‘சங்கர் குரு’ பட நாயகியான சீதாவும் இந்தப்படத்தில் முக்கியவேடத்தில் நடிக்கிறார்