நடிகர் ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளையை தொடங்கி வைத்த உலக நாயகன் கமலஹாசன் மற்றும் பாலம் கல்யாணசுந்தரம் இருவரும் அதன் முதல் நிகழ்ச்சியான கின்னஸ் சாதனைக்காக நடைபெற உள்ள ‘நானும் ஒரு விவசாயி’ என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்தார்கள்!
“நானும் ஒரு விவசாயி’ என்கிற தலைப்பில் பாரம்பரிய நாட்டு விதைகள் விதைத்து ஆகஸ்டு 26 ம் நாள் திண்டிவனத்தில் அருகில் உள்ள ஆவணிபூர் கிராமத்தில் இந்த கின்னஸ் சாதனை நிகழவிருக்கிறது. இதில் ஏராளமான மாணவர்கள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் , விவசாய ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் என 5000த்திற்கும் மேற்பட்டோர் இச்சாதனையில் பங்கு கொள்ளவுள்ளனர்.
இந்த “கின்னஸ்” சாதனை நிகழ்வில் ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை உறுப்பினர்களுடன் இணைந்து இச்சாதனை நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டர் மற்றும் லோகோவை அறிமுகப்படுத்தி வைத்த “உலக நாயகன் கமல்ஹாசன்” இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் காணொளியை கண்டு மிகுந்த பரவசத்துடன் குழுவினரை பாராட்டினார்.
மேலும் தன் ரசிகர்களின் நற்பணிமன்றத்தினரையும் ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் குழுவினரோடு பணிபுரியவும் கட்டளையிட்டார். இயற்கை உரம் கொண்டு பாரம்பரிய நாட்டு விதைகளால் உருவான உணவுகளை உண்போம் என்றவர் சுமார் 70% பாரம்பரிய நாட்டு விதைகள் நம் நட்டில் அழிந்து விட்டதாகவும் மீதமுள்ள 30% பாரம்பரிய நாட்டு விதைகளை காக்க ஒவ்வொருவரும் ‘நானும் ஒரு விவசாயியாக’ மாறுவோம் மாற்றுவோம் என்றார்.
இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் செயற்கை நிறங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய வெள்ளை சக்கரை, மைதா போன்றவற்றை தவிர்த்து இயற்கை தானியங்களான கேழ்வரகு, கோதுமை, நாட்டு சக்கரையால் உருவான கேக்கை வெட்டி, ஆரோக்கியமான கேக் கலாச்சாரத்தை வரவேற்போம் என்ற கமல், இயற்கை உரம் கொண்ட பையில் பாரம்பரிய நாட்டு விதைகளை தன் வீட்டு தோட்டத்தில் வளர்ப்பதாக உறுதியளித்தார்.
நானும் ஒரு விவசாயி விழா குழுவினர் கல் உப்பு, பட்டை தீட்டாத அரிசி, செக்கில் ஆட்டிய எண்ணெய், இயற்க்கை தானியங்கள், இயற்கையாக உருவான பழங்கள் போன்றவற்றை கமலுக்கு பரிசளித்தார்கள்.