தமிழ் திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் படமான ‘சிலந்தி’ என்கிற படத்தை இயக்கி ஆதிராஜன் தற்போது இயக்கும் புதிய படம் ‘அருவா சண்ட’. தென் மாவட்டங்களில் நடந்து வரும் ஆவணக் கொலைகளின் பின்னணியில், ஒரு கபடி வீரனின் கரடு முரடான காதல் கதையாக உருவாகி வருகிறது இப்படம்.
தமிழர்களின் தேசிய அடையாளமான கபடியின் பெருமைகளை உலகறிய உரக்கச் சொல்ல வரும் இந்தப்படத்தின் கதை நாயகனாக ராஜா என்பவர் நடிக்கிறார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கபடி வீரர் என்பது தான் ஹைலைட்டே. கதாநாயகிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.
இதுவரை திரையில் பார்த்திராத புதுமையான அம்மாவாக சரண்யா பொன்வண்ணனும், வில்லானாக ஆடுகளம் நரேனும் நடிக்கிறார்கள். மற்றும் கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து, பிளாக்பாண்டி உள்ளிட்ட பலர் கூட்டணி அமைத்து காமெடியில் கலக்க போகிறார்கள். போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம், தகராறு உட்பட பல படங்களுக்கு இசையமைத்த தரண் இசையமைக்கும் 25 – வது படம் இது என்பது இன்னொரு சிறப்பு.