அஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்

தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தன் இமை போல எண்ணும் நடிகரும், ரசிகனின் இமைகள் நொடிகூட திரையை விட்டு விலகி விடக் கூடாது என நினைக்கும் இயக்குநரும் ஒரு புதிய படத்தில் இணைந்தால்..அந்தப் புதிய படத்தை 7ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரித்தால்.. அந்த ஹீரோ சீயான் விக்ரமாகவும், அந்த இயக்குநர் அஜய் ஞானமுத்துவாகவும் இருந்தால்.. அந்தச் செய்தி கோலிவுட்டுக்கே கொண்டாட்டச் செய்தி அல்லவா?

அப்படியான கொண்டாட்டச் செய்தியைத் தான் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், Viacom 18 Studios நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் புதியபடத்தை அஜய் ஞானமுத்து இயக்க சீயான் விக்ரம் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்திற்கு மேலும் ஒரு மகுடம் சேர்ப்பது போல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானும் இணைந்துள்ளார் என்பது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தான் இயக்கிய டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்து கெத்து காட்டியவர் அஜய் ஞானமுத்து. நடிப்பு என்ற மகத்தான கலைக்காக தன் சப்தநாடிகளையும் திரையில் ஒப்படைக்கும் கம்பீர மனம் படைத்தவர் சீயான் விக்ரம். இந்த இருவரும் ஒன்றிணையும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. 2020-ல் சம்மர் கொண்டாட்டமாக ஏப்ரல் மாதம் படம் வெளிவர இருக்கிறது. மற்ற நட்சத்திரங்கள் யாரெல்லாம் இப்படத்தில் இருக்கிறார்கள் என்ற தகவலும் டெக்னிஷியன்ஸ் டீம் யார் யார் என்ற தகவலும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

ஆக்‌ஷன் த்ரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப்பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்சன் வேலைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் படம் தயாராக இருப்பதால் இந்திய சினிமாவில் இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

A R RahmanAtharvademondy colonyImaikka NodigalNayantharavikram ajay gnanamuthu