சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ஈழத்தமிழர் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘இனம்’ படம் நேற்று வெளியானது. இந்தப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தான், தமிழ்நாடெங்கும் வெளியிட்டது. ஆனால் படத்தில் சில காட்சிகள் பற்றிய முரண்பாடான கருத்துக்கள் ஆங்காங்கே படம் பார்த்தவர்களிடம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கும் மற்றும் சில தமிழ் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் இந்தப்படம் திரையிட்டு காட்டப்பட்டது. படம் பார்த்துவிட்டு அவர்கள் தெரிவித்த ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில் சில காட்சிகளை நீக்கிவிட்டு திரையிட ஏற்பாடு செய்துள்ளார் லிங்குசாமி.
அதன்படி பள்ளிக்கூட காட்சி, புத்தமத துறவி தமிழ் குழந்தைகளுக்கு மாதுளம்பழம் கொடுக்கும் காட்சி, சிங்கள ராணுவத்தான் குழந்தை போட்டோ வைத்திருக்கும் காட்சி, தலைவர் கொல்லப்பட்டார் என்ற ஒரு காட்சியின் வசனம் மற்றும் படத்தின் இறுதியில் காட்டப்படும் 35000 பேர் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல் உட்பட ஐந்து இடங்கள் நீக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார் லிங்குசாமி.