150, 200, 250, 408.. இதெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா..? மலையாள திரையுலகில் 20 வருடங்களுக்கு முன்பு கோலோச்சிய இரட்டை இயக்குனர்களான சித்திக்-லால் இருவரும் இணைந்து இயக்கிய படங்கள் ஓடிய நாட்களின் எண்ணிக்கை தான் இது.
‘ஹிட்லர்’, ‘காட்பாதர்’, ‘வியட்நாம் காலனி’ என வெள்ளிவிழா கொண்டாடிய படங்களை தந்த இவர்கள் ஒருகட்டத்தில் பிரிந்தனர். பிரச்சனை எல்லாம் எதுவுமில்லை. லாலைத்தேடி நடிக்க வாய்ப்பு வர, பிஸியான முழுநேர நடிகராகி விட்டார். (நம்ம ‘சண்டக்கோழி’ வில்லன் தான்)
சித்திக்கோ டைரக்ஷனில் பிஸியாகி தமிழ், இந்தியிலும் சேர்த்து அழுத்தமாக கால் பதித்துவிட்டார்( ‘ஃப்ரண்ட்ஸ்’, ‘எங்கள் அண்ணா’, ‘காவலன்’ படங்களை இயக்கியவர்தான்). இரண்டு பேருமே தங்களது துறையில் உச்சிக்கு வந்தும் விட்டனர்.. இடையில் நடிப்போடு சேர்த்து சில வெற்றிப்படங்களையும் இயக்கினார் லால்.
இப்போது 20 வருடம் கழித்து இவர்கள் இருவரும் புதிய படம் ஒன்றிற்காக இணைந்துள்ளனர். இந்தப்படத்திற்கு சித்திக் கதை எழுத, இயக்குகிறார் லால். மீண்டும் பழைய அதிசயங்களை இருவரும் நிகழ்த்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.