முற்றிலும் உண்மை சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ளது ‘மகாபலிபுரம்’ படம். படத்தின் தயாரிப்பாளரான விநாயக்கே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கதாநாயகிகளாக அங்கனாராய், விருத்திகா நடிக்க, முக்கியமான வேடத்தில் ‘சூதுகவ்வும்’, ‘நேரம்’ படங்களில் நடித்த ராஜ் திலக் நடித்துள்ளார்.
டான் சாண்டி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ‘முகமூடி’, ‘யுத்தம் செய்’ படங்களுக்கு இசையமைத்த ‘கே’ இசையமைக்கிறார். இந்தப்படத்தை ஸ்டுடியோ 9 சார்பாக சுரேஷ் வெளியிடுகிறார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய சுரேஷ், “படம் வெளியாகி, உடனுக்குடன் பலர் அந்தப்படத்தை பற்றி எழுதும் நெகடிவ் விமர்சனங்களால் ஒரு படத்தின் தயாரிப்பாளர் அடுத்த 2 மணி நேரத்தில் தெருவுக்கு வந்துவிடுவார்.. அடுத்து அவர் சென்னையை காலிசெய்ய வேண்டியதுதான். அதனால் படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் எழுதுங்கள்.. இல்லாவிட்டால் ஒரு நாள் கழித்து உங்கள் விமர்சனங்களை வையுங்கள்.. பாவம்.. அந்த தயாரிப்பாளர் கொஞ்சம் பிழைத்துப்போகட்டும்” என பத்திரிகையாளர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் வைத்தார் சுரேஷ்.