சிறிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு கைகொடுக்கும் விதமாக, இனி பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் மட்டுமே வெளியாகும் என தயாரிப்பாளர் சங்கம் ஒரு புதிய நடைமுறையை அமல்படுத்தி இருக்கிறது.
இந்த உத்தரவு சிறு பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்களை உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது. அந்த வகையில் இதை பயன்படுத்தி வரும் வாரம்(பிப்-28) மட்டும் 12 படங்கள் வெளியாக இருக்கின்றன. குறிப்பாக நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த ‘வல்லினம்’, ‘தெகிடி’, ‘அங்குசம்’ உட்பட வெளியாகும் 12 படங்களில் பிறமொழி டப்பிங் படங்களும் அடக்கம்.
மொத்தம் 800 திரையரங்குகளில் வெளியாகும் இந்தப்படங்களில் ‘வல்லினம்’ படத்திற்கு மட்டும் 400 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. காரணம் அது ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு என்பதும் ‘ஈரம்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய அறிவழகன் இயக்கியுள்ள படம் என்பதாலும் தான். மற்ற படங்கள் மீதியுள்ள 400 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகின்றன.
ஒரே நாளில் அதிகபட்சம் மூன்று படங்கள் வெளியாவது என்பது தான் ரசிகர்களை சென்றடைய சரியாக இருக்கும்.. ஆனால் 12 படங்கள் வெளியாவது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.