‘வேலன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் தொகுப்பு


Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் நாயகனாக நடிக்கும் “வேலன்” திரைப்படம். அழகான குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் கவின் எழுதி, இயக்கியுள்ளார். டிசம்பர் 31 வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று தனியார் பெண்கள் கல்லூரியில், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் பேசுகையில், “இது என் முதல் மேடை. Skyman Films International சார்பில் அனைவருக்கும் நன்றி. ஒரு நல்ல படம் செய்துள்ளோம் உங்கள் ஆதரவை தாருங்கள்.” என்றார்.

நடிகர் பிராங்ஸ்டர் ராகுல் பேசுகையில், “உங்களை போல் தான் நானும், இணையத்தில் இருந்துவிட்டு, இவர்களோடு மேடையில் அமர்ந்திருப்பது பெருமை, சூரி அண்ணனை படப்பிடிப்பில் பார்த்தால் சிரிப்பை அடக்க முடியாது அவ்வளவு காமெடி செய்வார். பிரபு சார் கூட இருப்பவரை அத்தனை நல்ல முறையில் பார்த்து கொள்வார். ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுப்பார். இப்படத்தில் என்னை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநர் கவினுக்கு நன்றி. முகேனும் நானும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். அவர் கேரவனில் இருக்க மாட்டார், எப்போதும் தொழிலாளர்களோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார். முகேன் என்னை ரியல் லைஃபில் ப்ராங்க் பண்ணிருக்கார். பிரிஜிடா சுட்டிப்பெண்ணாக நடித்திருக்கிறார். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், இந்த வேலன் படத்தை நீங்கள் ஹிட்டாக்க வேண்டும்.” என்றார்.

நாயகி மீனாக்‌ஷி கோவிந்தன் பேசுகையில், “இந்த காலேஜில் மூணு வருஷம் முன்னாடி சீட் கேட்டு வந்தேன் கிடைக்கவில்லை ஆனால் இப்பொது பிரபலமாக வந்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பில் நாங்களே சிரித்து, சிரித்து ரீடேக் வாங்கினோம், உங்களுக்கும் பிடிக்கும். முகேனை நான் பார்க்க வேண்டும், படத்தின் கதை கேளு, என என் அம்மா சொன்னார்கள். முகேனிடம் பழகிய பிறகு தான் இவரை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது என்பது தெரிந்தது, மிக நல்ல மனிதர். அவருடைய ரசிகர்கள் அவரை மிகவும் நேசிக்கிறார்கள். இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.” என்றார்.

நாயகி பிரிகிடா பேசுகையில், “இங்கு உங்கள் வரவேற்பை பார்க்கும் போது என் கல்லூரி நாட்களை நான் மிஸ் செய்கிறேன். இந்தப்படத்தை பொறுத்தவரை அனைவருமே மிகுந்த ஆதரவு தந்தார்கள் இந்தப்படம் என் மனதுக்கு நெருக்கமான படம், கோவிடுக்கு பிறகு எனக்கு திருப்பம் தந்த படம் இது. இந்தப்படம் உங்க அனைவருக்கும் பிடிக்கும், நான் தொடர்ந்து சினிமாவில் இருப்பேன். இன்னும் நிறைய படங்கள் நடித்து கொண்டிருக்கிறேன் உங்கள் ஆதரவை தாருங்கள்.” என்றார்.

நடிகர் சூரி பேசுகையில், “அண்ணாத்த படத்தில் நடிக்கும் போது ஷாட் ரெடி என சொன்னால், நாம் எந்திருக்கும் முன் 35 அடி போயிருப்பார் ரஜினி சார், அவருக்கு அந்த எனர்ஜியை கடவுள் தந்திருக்கிறார். அதை இந்த கல்லூரியில் பார்க்கிறேன். பிரின்ஸிபல் அவ்வளவு எனர்ஜியுடன் இருக்கிறார். சினிமாவில் இன்று ஜெயிப்பது அத்தனை ஈஸி இல்லை, முபாரக் சார் அடுத்து ஜீவி படம் செய்கிறார், வலிமை படம் விநியோகம் செய்கிறார் அவர் தொடும் இடம் எல்லாம் வெற்றி பெறுகிறது. அவருக்கு வாழ்த்துக்கள், அன்பு தம்பி கவின் சிறுத்தை சிவா அவர்களிடம் உதவியாளர் மிக சிறந்த உழைப்பாளி, அவரிடம் இருந்து வந்து, முதல் படம் செய்வது கவின் தான். உங்கள் குருநாதர் போல் நீங்கள் பெரிய வெற்றி பெற வேண்டும், முகேன் 500 பேர் இருந்தால் 495 பேர் விசில் அவருக்கு தான் கிடைக்கிறது, முகேனுடன் நடித்தது, சிவகார்த்திகேயனுடன் நடித்தது போல் இருந்தது. அவருக்கு மிகப்பெரும் எதிர்காலம் இருக்கிறது. இறைவன் ஆசிர்வாதம் அவருக்கு இருக்கிறது. மீனாக்‌ஷியுடன் கென்னடி கிளப் படத்தில் நடித்திருக்கிறேன் மிக அருமையாக நடித்துள்ளார். பிரிகிடாவுக்கு ஷீட்டிங் ஸ்பாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது, ராகுல் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விட்டான். கார் கம்பெனிக்குள் போய் ஒரு ப்ராங் பண்ணியிருந்தார் அட்டகாசமாக இருந்தது. மனுஷன் அடி வாங்காமல் தப்பி வந்து விடுகிறார். பிரபு சார் சீனியர் ஆக்டர், ஆனால் புதுசா வரும் நடிகரிடம் இயல்பாக பழகுவது எல்லாம் அத்தனை சாதாரணமானதல்ல, ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் நன்றாக பார்த்து கொள்வார், அவருக்கு பெரிய நன்றி. இந்தப்படம் வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்றார்.

நடிகர் பிரபு பேசுகையில், “இந்த கல்லூரியில் இந்த நிகழ்வு நடக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி. முகேனுக்கு இது போல் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கவின் ஒரு அருமையான இயக்குநர், கலைமகன் மிகச்சிறந்த தயாரிப்பாளர். ராகுல் தம்பி இணையத்தில் கலக்குகிறார். மீனாக்‌ஷியுடன் நடித்தது சந்தோஷம். தம்பி சூரி மிக கடினமாக உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள். பிக்பாஸ் முகேன் மிக நல்ல பையன், எப்படி அவர் பிக்பாசில் உண்மையாக இருந்து ஜெயித்தாரோ, அதே போல் இப்படத்துக்கும் உழைத்துள்ளார். அவருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்தப்படத்தில் பாடல்கள் நன்றாக இருக்கிறது ஆக்சன் காட்சிகள் காமெடி எல்லாம் நன்றாக வந்துள்ளது. படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும். எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பளித்த ஜெயின் காலேஜுக்கு நன்றி.” என்றார்.

நடிகர் முகேன் ராவ் பேசுகையில், “இவ்வளவு பெரிய மேடையை என் வாழக்கையில் முதல் முறையாக பார்க்கிறேன். கவின் அண்ணா, கலைமகன் முபாரக் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி, ஒரு கலைஞன் தனக்கு வாய்ப்பு கிடைக்காத என ஏங்கி கொண்டிருப்பான் அப்படி ஏங்கும் போது வாய்ப்பு தந்தவர்கள் இவர்கள், கவின் அண்ணா என்னிடம் கதை சொன்னபோதே மிகவும் ரசித்தேன். அவர் சொன்ன மாதிரியே சூப்பராக எடுத்திருக்கிறார். முபாரக் சார் என்னை மட்டுமல்ல இன்னும் நிறைய திறமையாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார், அவருக்கு நன்றி. பிரபு சார் மிகப்பெரிய லெஜண்ட் ஆனால் என்னை ஒரு மகனை போல், ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுத்து பார்த்து கொண்டார். சூரி அண்ணாவுக்கு நான் மிகப்பெரிய ரசிகன் அவர் இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு செல்ல வேண்டும். ராகுல் முதலில் பார்த்தவுடனே நெருங்கி விட்டோம், நிறைய கஷ்டங்களை தாண்டி வந்துள்ளார் அவர் ஜெயிக்க வேண்டும். தம்பி ராமையா அவரும் ஒரு நல்ல பாத்திரம் செய்துள்ளார். இந்தப்படமே ஒரு குடும்பமாக இணைந்து செய்துள்ளோம். மீனாக்‌ஷி மிகவும் அர்ப்பணிப்புடன் நடிக்க கூடியவர் தனது வேலையை சரியாக செய்பவர், சூப்பராக நடித்திருக்கிறார். பிரிகிடாவும் சூப்பராக நடித்திருக்கிறார். இந்த வரவேற்புக்கு உங்களுக்கு நன்றி. உங்கள் அன்பு தான் இங்கு என்னை அழைத்து வந்துள்ளது. வேலன் படம் எனக்கு மிகவும் முக்கியமான படம் இப்படம் குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இருக்கும்.” என்றார்.

இயக்குநர் கவின் பேசுகையில், “ஜெயின் காலேஜ் மாணவிகளுக்கு நன்றி இவ்விழாவை ஒரு திருவிழா போல் மாற்றி விட்டீர்கள், நன்றி. பிரபு சார் 2019 விஸ்வாசம் பட போஸ்ட் புரடக்சன் போது எல்லோருக்கும் 200 ரூபாய் கொடுத்து வந்தார் நான் தள்ளி நின்றேன் என்னை அழைத்து எனக்கும் கொடுத்து வாங்கிங்க உங்க வாழ்க்கை நல்லாருக்கும் என்றார். அவரிடம் தான் இது ஆரம்பித்தது. அப்புறம் முகேனை பார்த்தேன் பொள்ளாச்சி பையனாக நடிக்க வேண்டும் அவர் சரியாக இருப்பார் என, அவரிடம் கதை சொன்னேன், சிரித்து என்ஜாய் செய்தார். நான் சரியாக வருவேனா எனக்கேட்டார் நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்று சொல்லி ஒப்பந்தம் செய்தேன். கலைமகன் முபாரக் சாரை சந்தித்து கதை சொன்னேன். ஒரு அறிமுக இயக்குனருக்கு, அறிமுக நாயகனுக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் வேண்டாம் என எல்லோரும் சொன்னார்கள், ஆனால் இந்தப்படத்திற்கு இது கண்டிப்பாக தேவை மக்கள் ரசிப்பார்கள் என்று ஒப்புக்கொண்டார் அவருக்கு நன்றி. சூரி அண்ணாதான் நடிக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன், அவர் அப்போது அண்ணாத்த, வெற்றிமாறன் சார் படம் என பிஸியகா இருந்தார் ஆனால் என்னிடம் கதை கேட்டு உன் படம் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்லி நடித்து தந்தார். இப்போது வரை ஒரு அண்ணனாக படத்திற்கு உதவி செய்து வருகிறார். தம்பி ராமையா, படத்தில் எல்லோருடனும் அவருக்கு மட்டும் தான் காட்சிகள் இருக்கிறது. மிக அட்டகாசமாக நடித்திருக்கிறார். மீனாக்‌ஷி மிக அருமையாக நடித்து தந்துள்ளார். ப்ராங்ஸ்டர் ராகுல் அவரே சொந்தமாக நிறைய டெவலப் செய்து அசத்தினார். தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோரும் எனக்காக உடனிருந்து உழைத்தார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில் அசத்தியுள்ளார். எல்லோருக்கும் நன்றி. ஒரு மிகச்சிறந்த பொழுது போக்கு படமாக உங்கள் அனைவரையும் இப்படம் கவரும்.” என்றார்.

இப்படத்தில் மீனாக்‌ஷி கோவிந்தன் நாயகியாகவும் சூரி முக்கிய பாத்திரத்திலும் படம் முழுவதும் வரும் பாத்திரங்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரபு, மரியா வின்செண்ட், தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, பிரிஜிடா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல மலையாள மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, பாலாசுப்பிரமணியன் கலை இயக்கம் செய்கிறார். K.சரத்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் தொழில்நுட்பக் குழுவில் மகேஷ் மேத்யூ (ஸ்டண்ட்), தினேஷ்-விஜி சதீஷ்-ராதிகா (நடனம்), உமாதேவி-வேல்முருகன்-கலைமகன் முபாரக் (பாடல்கள்), தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.

Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், தயாரிப்பில், இயக்குநர் கவின் எழுதி, இயக்கியுள்ள ’வேலன்’ படம் டிசம்பர் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

actor prabhuactor sooribrigidadiretor kevinkollywood movie velanmeenakshi govindmugen raotamil movie velanvelanvelan audio launchvelan audio release