நான் படைத்த படைப்புகளில் இதுதான் சிறந்த படைப்பு – சமுத்திரக்கனி பெருமிதம்


தமிழ் திரையுலகின் சிறந்த நடிகரும், இயக்குநர்களில் ஒருவராகவும் திகழ்பவர் சமுத்திரக்கனி. தற்போது சமுத்திரக்கனி எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் ‘வினோதய சித்தம்’. சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ், இயக்குநர் பாலாஜி மோகன், ஹரிகிருஷ்ணன், அசோக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் தயாரித்துள்ள ’வினோதய சித்தம்’ படத்திற்கு N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி நேரடியாக ZEE5 ஒரிஜினல் OTT தளத்தில் வினோதய சித்தம் திரைப்படம் வெளியாகிறது.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிஜிட்டல் வெளியீடு நேற்று (அக்டோபர் 11) சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் பேசுகையில், “இந்த படத்திற்கு அதிக செலவு செய்யாமல் குறைந்த செலவில் மிக அருமையாக படத்தை எடுத்து தந்துள்ளார் சமுத்திரக்கனி .இந்த படத்தை பார்த்து பெண்கள் சிலர் கண்ணீர் விட்டு அழுது உள்ளனர். நீங்கள் இந்த படத்தை பார்க்கும் பொழுது உங்களை அறியாமலேயே எழுந்து நின்று கை தட்டுவீர்கள்.” என்றார்.

நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி பேசுகையில், “பாலுமகேந்திரா சார் சொன்னபடி ஒரு சாதாரண கதையை இயக்குனர் இயக்குவான் . ஒரு நல்ல கதை இயக்குனரை இயக்கும் . அதுபோல இந்தப் படம் எல்லோரையும் இயக்க வைத்து நல்ல படமாக வெளிவந்துள்ளது. இந்த படம் பார்த்தால் கண்டிப்பாக உளவியல் ரீதியாக சிறு மாற்றத்தை உணர்வீர்கள். நான் படைத்த படைப்புகளில் இதுதான் சிறந்த படைப்பாக என் மனமார நம்புகிறேன். இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்.” என்றார்.

நடிகை சஞ்சிதா ஷெட்டி பேசுகையில், “இயக்குநர் சமுத்திரகனி சாருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை தயாரித்த ராமநாதன் சாருக்கும், இப்படிப்பட்ட நல்ல படத்தை வெளியிடும் ZEE 5 நிறுவனத்திற்கும் நன்றி. இப்படத்தின் காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் மிக அருமையாக கொண்டு வந்துள்ளார். இந்த படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

நடிகர் அசோக் பேசுகையில், “வினோதய சித்தம் இது வெறும் படம் அல்ல .நம் வாழ்க்கையில் அனைவரும் கற்கவேண்டிய பாடமும் கூட. அப்படிப்பட்ட முக்கியமான விஷயத்தை இந்த படத்தில் சமுத்திரக்கனி கூறியுள்ளார். இப்படிப்பட்ட ஒரு அருமையான படைப்பில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குனர் சமுத்திரகனி சாருக்கும் அபிராமி ராமணநாதன் சாருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் பேசுகையில், ”இந்த படத்திற்கு மிக கவனமாக ஒளிப்பதிவு செய்ய வேண்டும் அதுதான் முக்கியம் என சமுத்திரகனி தெரிவித்தார் அதுபோலவே படத்தில் காட்சிகள் அருமையாக வந்துள்ளது. இந்த படத்தை 19 நாட்களில் எடுத்து முடித்தோம். அது சமுத்திரக்கனியால் மட்டுமே முடியும். இந்த படத்தில் நவரசம் கலந்த நடிப்பில் தம்பி ராமையா அவர்கள் நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி சார் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.” என்றார்.

actor and director samuthirakaniDeepakfilm newsKollywood NewsMunishkanthSamuthirakkaniSanjitha Shettytamil cinema newsThambi Ramaiahvinodhaya sidham