’நட்சத்திரம் நகர்கிறது’ காதல் படம் அல்ல காதலைப்பற்றிய படம் – பா. இரஞ்சித்

‘சார்பட்ட பரம்பரை’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. யாழி பிலிம்ஸ் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன், மனோஜ் லியோனல் ஜாச்சன் ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரி, ஷபீர், சார்லஸ் வினோத், வின்சு, சுபத்ரா, தாமு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தென்மா இசையமைத்திருக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் பா.இரஞ்சித் கூறுகையில், “’நட்சத்திரம் நகர்கிறது காதல் படம் அல்ல காதலைப்பற்றிய படம். ஆணும் பெண்ணும் சந்திக்கும்பொழுது காதலாகத்தான் ஆரம்பமாகுது. அது குடும்பத்துக்கு தெரியும் பொழுது தான் சமூகத்தின் பிரச்சினையாக மாறுகிறது. இங்கே காதலுக்கு ஒரு மதிப்பீடு இருக்கு. காதல் வர்க்கத்தையும் ஜாதியையும் பின்னிபிணைந்ததாக இருக்கிறது. காதல் பெர்சனலாக இருக்கும் பொழுது எந்த பிரச்சினையும் இல்லை. இப்போ காதலை ஒரு பொலிட்டிக்கல் டெர்ம் ஆக மாற்றி வச்சிருக்காங்க. அதை பற்றி விவாதிக்கிற படம்தான் ‘நட்சத்திரம் நகர்கிறது’. இதில் ஆண் பெண் காதல்கள் மட்டும் இல்லாது ஒரு பாலின காதலைப்பற்றியும், திருநங்கையின் காதலைப்பற்றியும் பேசுகிறோம்.

பாண்டிச்சேரியில் நாடக தியேட்டரில் நடிக்க கூடுகிற நடிகர்கள் அவர்களின் எமோஷ்னல், காதலை விவரிக்கிறது இந்தப்படம். ஒரு காதலை குடும்பமும் சமூகமும் எப்படிப் பார்க்கிறது என இந்த படம் முழுக்க பேசுகிறோம். நவீன சினிமாவின் தாக்கத்தில் எழுதியிருக்கிறேன். நல்லா வந்திருக்கு. ’நட்சத்திரம் நகர்கிறது’ படம் இதுவரை நான் எழுதி எடுத்த சினிமாவில் இது மாறுபட்டு இருக்கும். என்னுடைய சினிமா வாழ்க்கையிலும் இது முக்கியமான படமாக இருக்கும்.” என்றார்.

இளையராஜாவுடன் சேர்ந்து பணியாற்றுவீர்களா? என்று கேட்டதற்கு, “எனக்கு ரொம்ப பிடித்தவர்களை தூர நின்று பார்ப்பேன். இசைஞானியோடு இணைந்து வேலை செய்ய முடியும்னு இன்றுவரை நான் நினைத்ததில்லை. அவர் கிட்ட நெருங்கவே தயக்கம் இருக்கு.அவர் பெரிய மேதை.

இசைஞானி இளையராஜா இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்கவேமுடியாது. எனக்கு வழிகாட்டிய என் முன்னத்தி ஏரை நம்பித்தான் எங்கள் வீட்டில் என்னை சினிமாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர் பாடல்கள் எனக்கு சினிமா பாடல்கள்களாய் இல்லாமல் தன்னம்பிக்கை பாடல்களாக இருந்திருக்கிறது. ராஜாவை தினம் தினம் ரசிப்பவன் நான்.” என்றார்.

நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இப்படத்தின் இணை தயாரிப்பை பா.இரஞ்சித் கவனிக்க, உமாதேவி, அறிவு ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். அனிதா ரஞ்சித் மற்றும் ஏகாம்பரம் ஆடைவடிவமைப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். ஸ்டன்னர் சாம்ம் சண்டைப்பயிற்சியை கவனிக்க, செவ்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்கிறார். பி.ஆர்.ஓ பணியை குணா கவனிக்கிறார்.

bollywood newsdirector pa ranjithdushara vijayankalidas jayamKollywood Newsnatchathiram nagarkirathuNeelam ProductionsPa.Ranjithtollywood news