Tribal Horse Entertainment நிறுவனம் சார்பில் நடிகர் கிருஷ்ணா தயாரிப்பில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திற்காக, இயக்குநர் திரு இயக்கத்தில், கணேஷ் கார்த்திக்கின் கதை மற்றும் திரைக்கதையில், நடிகை அஞ்சலி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இணய தொடர் ‘ஜான்சி’. 10 எபிசோடுகளாக உருவாகியுள்ள திரில்லர் இணைய தொடரான இதில், வாழ்வின் கடந்த கால நினைவுகளை மறந்து போன ஒரு பெண், கடந்த காலத்தின் பின்னிருக்கும் ரகசியங்களை தேடுவதை திரைக்கதையாக்கியுள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இன்று (அக்டோபர் 27) டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் உலகம் முழுவதும் ‘ஜான்சி’ இணைய தொடர் வெளியாகியுள்ளது. முன்னதாக ‘ஜான்சி’ இணைய தொடர் குழுவினர் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் நடிகர் ஆதித்யா பேசுகையில், “என்னுடைய ஃபர்ஸ்ட் புராஜக்ட்டுக்கு கிருஷ்ணா சார் தான் புரடியூசர். அவர் என் ஷோ ரீல் பார்த்து அரை மணி நேரம் பாராட்டினார். ஒரு நடிகராக இருந்துகொண்டு அடுத்தவரை பாராட்ட பெரிய மனம் வேண்டும். அவர் கூப்பிட்ட போது நான் யோசிக்கவே இல்லை. உடனே ஒப்புக்கொண்டேன். தெலுங்கில் நானே டப் பண்ணியிருக்கேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.” என்றார்.
எழுத்தாளர் கணேஷ் கார்த்திக் பேசுகையில், “இந்தகதையை எழுதிவிட்டு பலரிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது கிருஷ்ணா சாரை சந்தித்தேன். அவர் கேட்டவுடன் இதை நாம் பண்ணலாம் என்றார். இயலாமை கொண்ட ஒரு பெண்ணின் கோபம் தான் இந்தக்கதை. மிகவும் அர்ப்பணிப்போடு உருவாக்கியுள்ளோம். திரு சாரிடம் இத்தொடரில் வேலை பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன். அஞ்சலி கேமரா முன் வந்துவிட்டால் அப்படியே கதாப்பாத்திரமாக மாறிவிடுவார். மிக திறமைசாலி. என்னுடைய திரை வாழ்வின் ஆரம்ப பயணம் இந்த “ஜான்ஸி”. உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.” என்றார்.
ஒளிப்பதிவாளர் அர்வி பேசுகையில், “இந்தக்கதையில் 90s காலகட்டம் முதல் இப்போது வரையிலான சம்பவங்கள் இருக்கிறது. கதாபாத்திரங்களின் மூடுக்கேற்றவாறு, கதைக்கேற்றவாறு ஒளிப்பதிவு செய்துள்ளோம். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளார்கள் எல்லோருக்கும் நன்றி.” என்றார்.
இயக்குநர் திரு பேசுகையில், “கிருஷ்ணா என்னிடம் போன் செய்து இந்தக்கதை பற்றி சொன்னார். முதலில் வெப் சீரிஸாக எடுக்க நிறைய தயக்கம் இருந்தது. இதை எப்படி எடுக்க முடியும் என பயமாக இருந்தது. மிகப்பெரிய ஸ்கேலில் எடுக்க வேண்டிய கதை. எல்லோரும் சேர்ந்து அதை குறிப்பிட்ட பட்ஜெட்டில் 10 எபிஸோடில் எடுத்துள்ளோம். இதில் மிகப்பெரிய ப்ளஸ் திரைக்கதை. மிக அட்டகாசமாக எழுதியிருந்தார்கள், பார்க்கும் போது உங்களுக்கு தெரியும். கிருஷ்ணாவுடன் நடிகராக அவரை இயக்கி வேலை பார்ப்பேன் என நினைத்தேன் ஆனால் அவர் தயாரிப்பாளராக இருக்கும் படைப்பில் வேலை பார்த்திருக்கிறேன். என்னை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார். ஒளிப்பதிவாளர் மிக அட்டகாசமாக செய்துள்ளார். ஜீகே மிக சிறந்த இயக்குநராக வருவார். அஞ்சலி இதில் அதிரடி ஆக்சன் பண்ணியிருக்கார். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளார்கள். இந்தப் படைப்பு கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும்.” என்றார்.
நடிகை சரண்யா பேசுகையில், “தமிழில் எனக்கு முதல் வெப் சீரிஸ். கிரித்தி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ளேன். மிக புதுமையான அனுபவமாக இருந்தது. இயக்குநர் திருவிடம் நிறைய கற்றுக்கொண்டேன். தயாரிப்பாளர் கிருஷ்ணா, இயக்குநர் மற்றும் இதில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் மற்றும் நடன இயக்குநர் கல்யாண் பேசுகையில், “கிருஷ்ணாவும் நானும் சகோதரர்கள் மாதிரி பழகுவோம். அவர் இதில் நடிக்கிறீர்களா என கேட்டவுடன் உடனே ஓகே சொல்லி விட்டேன். ஒரு அவுட்டிங் மாதிரி தான் இந்தப் படப்பிடிப்பு இருந்தது. மிக ஜாலியாக என்ஜாய் செய்தோம். இந்த தொடர் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் பாருங்கள். நன்றி.” என்றார்.
இயக்குநர் சத்ய சிவா பேசுகையில், “கிருஷ்ணா சாரை நல்ல நடிகராக தெரியும். அவர் கண்டிப்பாக தயாரிப்பாளர் ஆவார் என கழுகு டைம்ல இருந்தே தெரியும். கழுகு கதைக்கு தயாரிப்பாளர் கிடைக்காத போது, அதை பலரிடம் எடுத்து சென்றவர் அவர் தான். அவர் கண்டிப்பாக ஒரு நல்ல தயாரிப்பாளராக ஜெயிப்பார். எங்கள் கூட்டணியில் அடுத்து “பெல்பாட்டம்” படம் வருகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார்.
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் ராம் பேசுகையில், “ஜான்சி எங்கள் இரண்டு வருட கால உழைப்பு. இதில் எல்லோரும் கடினமாக உழைத்துள்ளார்கள். அவர்கள் உழைப்பின் பலன் இதில் கண்டிப்பாக கிடைக்கும் என நம்புகிறேன்.” என்றார்.
நடிகர் தயாரிப்பாளர் கிருஷ்ணா பேசுகையில், “இந்த வருடம் எனக்கு படம் எதுவும் வரவில்லை என்பதால் உங்களை சந்திக்க முடியவில்லை. ஆனால் அடுத்ததாக “பெல் பாட்டம்” வருகிறது. எனக்கு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்பது கனவு. இது எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு. ஹாட்ஸ்டாரில் இந்த கதையை சொன்னவுடன் ஒப்புக்கொண்டார்கள். ஜீகேயிடம் இதை பெரிய டைரக்டர் பண்ணினால் நல்லாருக்கும் என்றவுடன் ஜீகே ஒப்புக்கொண்டார். திருவிடம், ஜீகே ஒரு எபிஸோடாவது டைரக்ட் பண்ணணும் என்றேன். அவரும் பெருந்தன்மையாக ஓகே என்றார். அஞ்சலி போன்ற திறமையான நடிகர்களை பல மொழிகளிலும் இருந்து கூட்டி வந்திருக்கிறோம். நான் இதில் நடிக்கவில்லை எனக்கு எதாவது கொடுங்க எனக் கேட்டேன். ஆனால் கடைசி வரை தரவில்லை. இந்த தொடர் மிக நன்றாக வந்துள்ளது. முக்கியமாக இத்தொடருக்கு பெரும் ஒத்துழைப்பு தந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார்க்கு நன்றி. இது எங்கள் மனதுக்கு பிடித்த படைப்பு, உங்களுக்கும் பிடிக்கும்.” என்றார்.
அஞ்சலி கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘ஜான்சி’ இணைய தொடரில் சாந்தினி செளத்திரி, ராஜ் அர்ஜுன், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, ராமேஸ்வரி தல்லூரி, சம்யுக்தா ஹார்நாட், சரண்யா ராமச்சந்திரன், சுரேஷ் சக்ரவர்த்தி, கல்யாண் மாஸ்டர், முமைத் கான் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.