தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், அவ்வபோது சில அறிக்கைகள் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார். அந்த வகையில், அவர் தற்போது வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றின் மூலம் தனது ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடம் அன்பு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
அதாவது, ரசிகர்ள் அஜித்தை ‘தல’ என்று அழைப்பது அனைவரும் அறிந்தது தான். சில ஊடக செய்திகளில் கூட அஜித்தை தல என்று குறிப்பிட்டு எழுதுவது உண்டு.
இந்த நிலையில், இனி தன்னை யாரும் ‘தல’ என்று அழைக்க வேண்டாம், என்று நடிகர் அஜித்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து தனது பி.ஆர்.ஓ மூலம் நடிகர் அஜித்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,
இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித்குமார் அல்லது அஜித் என்றோ அல்லது ஏ.கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.
தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம், என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.
உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.