சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில் நடந்த போர் ஒன்றை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு (பார்ட்-1) படத்தின் மூலமாக முதன்முறையாக ஈழ தமிழர் வரலாற்றை தெளிவாக படம்பிடித்து உலக தமிழர்களின் பாராட்டுக்களை பெற்ற இயக்குநர் கிட்டு. தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் கருணாஸ் தயாரித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படத்தின் டீஸரை நேற்று மாலை 6 மணிக்கு கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார்.
போர்க்களத்தில் காயம்பட்ட தமிழ் வீரர்கள் மட்டுமல்லாது எதிரி வீரர்களையும் காப்பாற்றி, போரில் கூட தமிழர்கள் எவ்வாறு அறம் சார்ந்து செயல்பட்டுள்ளனர் என்பதை மையப்படுத்தி, குறிப்பாக போர் மருத்துவ பின்னணியில் இந்தப்படம் உருவாகியுள்ளது.
சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லன் களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். மற்றபடி பெரும்பாலும் புதுமுகங்களே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
படத்தில் முக்கால் மணி நேரம் ஒரு முக்கிய பகுதியில் காட்சிகள் நடைபெறும். அதாவது முதன்முறையாக இந்தப்படத்திற்காக பதுங்கு குழிக்குள் மருத்துவம் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி இருக்கின்றனர். இதற்காக நிஜமாகவே மண்ணுக்கு கீழே பதுங்கு குழி தோண்டி அதில் மருத்துவ முகாம் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
தற்போது டீஸர் வெளியாகியுள்ள நிலையில் படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கென் மற்றும் ஈஸ்வர் இசையமைத்துள்ளனர். சி.எம்.இளங்கோவன் படத்தொகுப்பு செய்ய, சரவெடி சரவணன் மற்றும் பிரபாஹரன் வீரராஜ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர். முஜிபூர் ரஹ்மான் கலையை நிர்மாணிக்க, ஏ.ஜான் பி.ஆர்.ஓ-வாக பணியாற்றுகிறார்.