’கட்சிக்காரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு

பிஎஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ’கட்சிக்காரன்’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் சென்னை செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்கத் தலைவரும் தயாரிப்பாளருமான கே. ராஜன் பாடல்களை வெளியிட இயக்குநர் பேரரசு பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் கதை நாயகனாக நடித்துள்ள விஜித் சரவணன் பேசுகையில், “இது எனக்கு முதல் மேடை.இது போன்றதொரு மேடை முன்பே அமைந்திருக்க வேண்டியது. சரியாக நேரம் அமையாததால் தள்ளிப் போய் இப்போதுதான் இந்த வாய்ப்பு வந்திருக்கிறது.இந்தப் படத்தின் இயக்குநர் ஐயப்பன் எனது இனிய நண்பர். அவர் ‘டோனி கபடிக் குழு ‘என்ற படம் எடுத்தார். அதில் எனக்கு வில்லன் வாய்ப்பு கொடுத்தார். இதில் கதையின் நாயகனாக நல்லதொரு கதாபாத்திரம் கொடுத்துள்ளார்.இந்தப் படத்திற்கு எது தேவையோ அதைக் கேட்டு வாங்கினார்.எது தேவை எது தேவையில்லை என்பதில் தெளிவாக இருந்தார்.அண்ணன் அப்புக்குட்டி முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.தேசிய விருது வாங்கிய அவருடன் நடித்தது எனக்குப் பெருமை.இந்தப் படத்திற்காக எட்டு கிலோ நான் எடையைக் கூட்டி யிருக்கிறேன். எண்ணம் போல் வாழ்க்கை என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.நான் 2000 சினிமா கம்பெனிகளுக்கு என்னுடைய போட்டோக்களை எடுத்துக் கொண்டு ஏறி இறங்கி இருக்கிறேன். எந்த கம்பெனியில் சென்று பார்த்தாலும் என்னுடைய போட்டோக்கள் இருக்கும். இப்போதுதான் எனக்கு நல்ல வாய்ப்பு வந்திருக்கிறது.சினிமா மீது எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது. நான் ஒரு கதை என்ன கேட்கிறதோ அப்படியே நடிப்பேன்.நான் ஒரு நடிகன் அவ்வளவுதான். பாசிட்டிவ் நெகடிவ் என்ற பேதமெல்லாம் எனக்குக் கிடையாது.” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவ சேனாதிபதி பேசுகையில், “நான் 2012-ல் சினிமாவுக்கு வந்துவிட்டேன். சினிமா பற்றி எதுவும் தெரியாத நிலையில் நான் ஒரு தெலுங்குப் படம் தயாரித்தேன். அது எனக்குச் சரியாக அமையவில்லை. அடுத்து 2015 – ல் இஞ்சி முறப்பா என்று ஒரு படம் எடுத்தேன்.அது வெளியான போது வேதாளம், தூங்கா நகரம் என்று இரண்டு பெரிய படங்கள் வந்தன. எனக்குத் திரையரங்குகள் சரியாகக் கிடைக்காமல் ஒரு 60- 70 போல்தான் கிடைத்தன.அந்தப் படமும் எனக்குச் சரியாக அமையவில்லை. 2019 -ல் காதல் முன்னேற்ற கழகம் என்றொரு படம் தயாரித்தேன். இப்படி மூன்று படங்கள் தயாரித்து சில கோடிகள் இழந்தேன்.அந்த அனுபவங்களோடுதான் இதில் நான் தயாரிப்பில் பங்கெடுத்தேன்..ஆரம்பத்தில் இதில் நடிப்பதற்காகத்தான் நான் வந்தேன்.பிறகு இவர்களின் சூழ்நிலையைப் பார்த்து விட்டுத் தயாரிப்பில் இணைந்தேன். முதல் ஷெட்யூல் படப்பிடிப்புக்குப் போனபோது எனக்குத் திருப்தி இல்லாமல் தான் இருந்தது. இது சரியாக வருமா? இது ஓடுமா? எனச் சந்தேகப்பட்டேன். ஆனால் ஐயப்பன் தனது திறமையால் எண்ணத்தை மாற்றிவிட்டார். இதில் அவர் மிரட்டி இருக்கிறார்.இந்தப் படம் நன்றாக வந்துள்ளது. எனக்குப் பிடித்து விட்டது.” என்றார்.

நாயகி ஸ்வேதா டாரதி பேசுகையில், “இந்தப் பட வாய்ப்பு வந்தபோது அரசியல் சார்ந்த கதை என்றதும் முதலில் நான் யோசித்தேன். நடிப்பதற்குத் தயக்கமாக இருந்தது .பிறகு என் கதாபாத்திரத்தைக் கேட்டபோது பிடித்திருந்தது. ஒப்புக்கொண்டேன். நான் அரக்கோணத்தைச் சேர்ந்தவள் .சினிமாவில் நடிப்பதற்காக என்னுடைய குடும்பமே சென்னை வந்தது. அந்த அளவுக்கு எனது பெற்றோர்கள் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். இந்த படம் எனக்கு நல்லதொருவாய்ப்பு. வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறேன்.அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார்.

இயக்குநர் ஐயப்பன் பேசுகையில், “முதலில் எனது குருநாதர் இயக்குநர் ஏ. வெங்கடேஷ் அவர்களுக்கு நன்றி. இந்தப் பட வாய்ப்பு கொடுத்துள்ள தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்தப் படம் எப்படிப்பட்டது இதன் கதை என்னவென்றால்.தொண்டனுக்கும் தலைவனுக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் இந்தப்படத்தின் கதை.இது தவறு செய்யும் தலைவனைத் தட்டிக் கேட்கும் ஒரு தொண்டனின் கதை .இன்றைய அரசியலில் பல விஷயங்கள் ஒழிக்கப்பட வேண்டும்.அரசியலைச் சீரழித்துக் கொண்டிருக்கும் சாதிக் கட்சிகள் ஒழிய வேண்டும். சாதிக் கட்சிகள் தான் தீவிரவாதத்தை வளர்க்கின்றன .சாதிக் கட்சிகளை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும்.அரசியல் கட்சிகள் கூட்டணி வைப்பதைத் தடை செய்ய வேண்டும். அதுதான் ஊழலுக்கு வழி வகுக்கிறது.காமராஜர், கக்கன் போன்ற அரசியல் தலைவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்.” என்றார்.

நடிகர் அப்பு குட்டி பேசுகையில், “விஜித் சரவணன் நல்ல மனிதர்.படத்திற்காக ஒத்திகை பார்க்கும் போதெல்லாம் எப்படி நடித்திருக்கிறேன் என்று என்னிடம் கேட்பார். நானே பயந்து கொண்டு தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் அவர் அவ்வளவு ஆர்வமாகக் கேட்பார். அவர் இப்படி நடிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு படத்திற்கு இயக்குநர் தான் முக்கியம். இயக்குநர் இல்லை என்றால் எந்த நடிகர்களும் வெளியே தெரிய மாட்டார்கள். குறுகிய காலத்தில் 20 நாளில் இந்தப் படத்தை முடித்துள்ளார்கள் .நான் கெஸ்ட் ரோலில் இப்படத்தில் வருகிறேன். ஆனாலும் எனக்குத் திருப்தியான வாய்ப்பு இது.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “இந்தப் படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பெயர்களை எல்லாம் பார்க்கிறேன். சரவணன்,முருகன், ஐயப்பன் என்று எல்லாமே ஆன்மீகப் பெயர்களாக உள்ளன. இவர்கள் ஆன்மீகக் கட்சிதான். பக்தி இருந்தாலே வெற்றிதான்.இது அரசியல் சம்பந்தப்பட்ட கதை, அரசியல் படத்திற்கு கதை, வசனம் கூட எழுதி விடலாம். காட்சிகளை அமைத்து விடலாம். ஆனால் அதற்கான கரைவேட்டிகளை தேடிக் கண்டுபிடிப்பது பெரிய சிரமம். படத்தில் ஒரு கட்சியைக் காட்டுவது என்றால் கூட அந்தக் கட்சிக்கான கொடி, கரை வேட்டி நிறத்தைக் கண்டுபிடிப்பதற்குப் படாதபாடு பட வேண்டும். எந்த கட்சியும் சாராத நிறத்தில் கண்டுபிடிப்பதற்கு நான் சிவகாசியிலும் திருவண்ணாமலையிலும் மிகவும் சிரமப்பட்டேன். ஏனென்றால் எந்த நிறம் எடுத்துப் பார்த்தாலும் அந்த நிறத்தில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் கொடிகள், வேட்டிகள் இருக்கின்றன. ஒரு கரை வேட்டிக்கே இவ்வளவு கஷ்டம் என்றால் படத்தை எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

அரசியல் படங்கள் எடுக்கத் தைரியம் வேண்டும். ஒரு காலத்தில் அதாவது எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில், நிறைய அரசியல் படங்கள் வந்தன. அப்போது ராமநாராயணன், எஸ்.ஏ.சந்திரசேகர் போன்றவர்கள் அரசியல் படங்களை எடுத்தார்கள். பிறகு மணிவண்ணன் எடுத்தார். அப்போது எம்.ஜி.ஆர் எதையுமே செய்யவில்லை. அப்படி ஒரு சகிப்புத்தன்மை அவருக்கு இருந்தது. யார் எதைச் சொன்னாலும் மக்கள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது. கடந்த 15 அல்லது 20 ஆண்டுகளில் அது மாதிரி அரசியல் படங்கள் எல்லாம் வந்த மாதிரி தெரியவில்லை. இந்த படம் எடுக்க முன்வந்த தயாரிப்பாளரைப் பாராட்டலாம். இயக்குநர் ஷங்கர் முதல்வன் படம் எடுத்த போது கூட பிரச்சினைகள் வந்தன. சேரன் தேசிய கீதம் எடுத்த போதும் அதே போல பிரச்சினைகள். அம்மையார் காலத்தில் யாரும் அரசியல் பற்றிப் படங்களில் பேசவே இல்லை. அரசியல் பக்கம் யாரும் போகாமல் படம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். எம்ஜிஆர் காலத்திலிருந்த அந்தச் சகிப்புத்தன்மை இன்று எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. இந்த நிலையில் இந்தப் படம் உருவாகி வந்திருக்கிறது. இது ஒரு அரசியல் கட்சித் தொண்டனைப் பற்றிய கதை. தலைவரை நம்பி வாழ்க்கையை வீணடித்த தொண்டன் செலவுக் கணக்கு திரும்ப கேட்பது போல் இந்தக் கதை உருவாகி இருக்கிறது என்று நினைக்கிறேன். இந்தப் படத்தை எடுத்துள்ள தயாரிப்பாளரை வாழ்த்துகிறேன்.” என்றார்.

சத்தியம் டிவி நெறியாளர் முக்தார் அகமது பேசுகையில், “ஒரு காலத்தில் பத்திரிகையாளன் என்பவன் தைரியமாக இருந்தான். இன்று அந்த தைரியம் இருக்கிறதா? அந்த சுதந்திரம் இருக்கிறதா? பல ஊடகங்கள் அரசியல் கட்சிகளின் கைப்பிடிக்குள் போயிருக்கின்றன. எதையும் தைரியமாகச் சொல்ல முடியாத சூழல் இருக்கிறது. பத்திரிகையாளன் என்பவன் மக்கள் பிரதிநிதி, அவன் எவருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இன்று பத்திரிகையாளன் கட்சிக்காரன் போல மாறிவிட்டான். அரசியல்வாதிகளிடம் “அண்ணே ” என்கிறான். மக்களின் பிரதிநிதியாக குரல் கொடுக்கும் அவன், யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை. நேர்காணல் செய்வது என்றால் கூட அதை எதிர்கொள்வதற்கு இப்போது அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தைரியம் இல்லை. என்ன கேள்விகள் கேட்கப் போகிறீர்கள் என்று ஆள் வைத்துக் கேட்கிறார்கள். இந்த நிலையில் பத்திரிகையாளன் தைரியமாக இருக்க வேண்டும். இது போன்ற படங்கள் நிறைய வர வேண்டும். இதன் பின்னாலாவது அரசியல்வாதிகள் திருந்துகிறார்களா என்று பார்ப்போம்.” என்றார்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசுகையில், “இங்கே பொன்னாடை என்று போர்த்துகிறார்கள். இந்த பொன்னாடையால் என்ன பயன் இருக்கிறது? எந்தப் பயனும் கிடையாது. இது முழுக்க முழுக்க வீணான ஆடம்பரம். அதனால் நம் தமிழ்நாட்டிற்கும் தமிழருக்கும் எந்தப் பயனும் இல்லை. எங்கிருந்தோ ராஜஸ்தான் போன்ற பிற மாநிலங்களில் இருந்து வருகிறது. அங்கேயும் யாரோ ஒருவர் தான் அதைச் செய்கிறார்கள். அதைவிட தமிழ்நாட்டையும் கவனிக்க வேண்டும் அல்லவா? தமிழ்நாட்டில் கைத்தறி நெசவாளர்கள் சேலம், திருப்பூர் போன்ற இடங்களில் நமது தமிழர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே கைத்தறி ஆடைகளை மேடைகளில் அணிவிக்கலாம். ஒன்றுக்கும் உதவாத இந்தப் பொன்னாடை தேவையில்லை. காதியை வரவேற்போம் ஆதரிப்போம். இன்று ஜிஎஸ்டி என்று அக்கிரமமாக வசூல் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் இப்படி வசூலாகிறது. எதற்கெடுத்தாலும் ஜிஎஸ்டி என்று இலக்கு வைத்து கொண்டு வசூலிக்கிறார்கள்.கட்சிக்காரன் என்று ஒரு படம் எடுத்திருக்கிறார்கள். அதை எடுக்க இங்கே புதியவர்கள் வந்திருக்கிறார்கள் .

இது அரசியல் படம் என்று தெரிகிறது. படம் எடுங்கள் யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். அதேநேரம் தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள். தவறுகளைச் சுட்டிக் காட்டாதவன் மனிதனே கிடையாது. இதுதான் இயக்குநர்களுக்கு என் வேண்டுகோள். நம் நாட்டில் தொண்டர்கள் தலைவர்களிடம் அடிமையாக இருக்கிறார்கள். தலைவர் மாறினாலும் தொண்டர்கள் மாறாமல் இருக்கிறார்கள். ஜோக்கர் என்றொரு படம் வந்தது அதில் பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் நடிக்கவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் அநியாயங்களை, தவறுகளைச் சுட்டிக்காட்டியது. அந்தப் படம் மிகப் பிரமாதமாக ஓடியது. இந்தப் படத்தைக் குறுகிய காலத்தில் எடுத்து முடித்துள்ளார்கள்.

அப்போதெல்லாம் ராமநாராயணன் நிறைய படங்கள் எடுத்தார். குறுகிய காலத்தில் படம் எடுத்து வெற்றி கண்ட அவர், 28 நாட்களில் ஒரு படத்தை எடுத்து முடித்துவிடுவார். படத்தின் வசனங்கள் பகுதியை 18 நாட்களும் ,பாடல்களுக்கு 6 நாட்களும், சண்டைக் காட்சிகளுக்கு 2 அல்லது 3 நாட்களும் என்று திட்டமிட்டு முடித்து விடுவார். இதுதான் அவரது கணக்கு .ஒரு படம் வெளியாகும் போது அடுத்த படம் தொடங்கி விடும். அவர் இயக்கியதில் எண்பது சதவிகிதமான படங்கள் வெற்றிப் படங்கள் தான். அவர் விலங்குகளை வைத்து படம் எடுத்தார். அதிலும் பெரிய வெற்றி கண்டார். இங்கே ஓர் எழுத்தாளர் இயக்குநர் வந்துள்ளார். அவரது பெயர் சம்பந்தம். ஏராளமான விலங்குகள் சம்பந்தப்பட்ட கதையை உருவாக்கியவர். பஞ்ச கல்யாணி என்ற படம் கழுதையை வைத்து எடுத்தார். இப்போதும் அவர் கையில் நிறைய கதைகள் உள்ளன.
கதையின் தேவை உள்ளவர்கள் அவரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது கதை இல்லாமல் படம் எடுக்கிறார்கள் ,அல்லது அடுத்தவன் கதையைத் தன் கதை என்று போட்டுக் கொள்கிறார்கள். கட்சிக்காரன் படம் அரசியல் வாதிகளை விமர்சிக்கிறது. அரசியல்வாதிகளுக்கு என்ன சொல்ல வேண்டும்? ஊழல் செய்ய வேண்டாம். அது பாவம். அரசியல்வாதிகளே ஊழல் செய்யாதீர்கள் . நீங்கள் எதைச் சேர்த்து வைத்தாலும் பாவத்தைச் சேர்க்காதீர்கள். அது உங்கள் சந்ததியைப் பாதித்து உங்கள் தலைமுறையையே அழித்துவிடும் என்பதை மறந்து விடாதீர்கள்.” என்றார்.

விழாவில் இயக்குநர்கள் எத்தன் சுரேஷ், கேந்திரன் முனியசாமி, மதுராஜ், தொழிலதிபர் தூத்துக்குடி பால்ராஜ்,படத்தின் இணைத் தயாரிப்பாளர் மலர்க்கொடி முருகன், இசையமைப்பாளர்கள் ரோஷன் ஜோசப்,மகேந்திரன், பாடல் எழுதிய நா. ராசா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.
————————-
நடிகர் மேத்யூ தாமஸ் – நடிகை மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கும் ‘கிறிஸ்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

காதல் உணர்வை கொண்டாடும் படைப்பாக உருவாகி இருக்கும் ‘கிறிஸ்டி’

‘பேட்ட’, ‘மாஸ்டர்’ படப் புகழ் நடிகை மாளவிகா மோகனனும், மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் மேத்யூ தாமஸும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கிறிஸ்டி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான பிரித்விராஜ், ஜெயசூர்யா, டோவினோ தாமஸ், நிவின் பாலி, சன்னி வெய்ன், உன்னி முகுந்தன், ஜாய் மாத்யூ, நடிகை மஞ்சு வாரியர், பஷில் ஜோசப், அந்தோணி பேப் ஆகியோர் தங்களது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘கிறிஸ்டி’. இதில் நடிகர் மேத்யூ தாமஸ் மற்றும் நடிகை மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் திரைக்கதையை பிரபல எழுத்தாளர் பென்யமின் மற்றும் ஜி. ஆர். இந்துகோபன் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ஆனந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை மனு ஆண்டனி கவனிக்க, சுஜித் ராகவ் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராக்கி மவுண்டன் சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் சஜய் செபாஸ்டியன் மற்றும் கண்ணன் சதீசன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. காதல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு ‘கிறிஸ்டி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள பூவார் மற்றும் மாலத்தீவுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

மேத்யூ தாமஸ் மற்றும் மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கும் ‘கிறிஸ்டி’ திரைப்படம் மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

film newskatchikkarankatchikkaran audio launchkatchikkaran movie reviewKollywood Newsmovie newstamil movie katchikkaran